×

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இவ்வருட நிறை புத்தரிசி பூஜை நாளை (10ம் தேதி) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5.45 முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறும்.

முன்னதாக புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் 18ம் படி வழியாக கொண்டுவரப்பட்டு கோயில் முன் உள்ள கணபதி மண்டபத்தில் வைக்கப்படும். இதன் பின்னர் பூஜைக்காக இவை கோவிலுக்குள் கொண்டு செல்லப்படும். பூஜை நடத்திய பின்னர் இந்த நெற்கதிர்கள் கோயில் முன் கட்டப்படும். இதன் பின்னர் இவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இன்று மதியத்திற்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

The post நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Naai Buddharisi Puja ,Sabarimala temple walk ,Thiruvananthapuram ,Mass Buddharisi Puja ,Sabarimala Ayyappan Temple ,Sabarimala temple ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்